சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்றம் கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதில், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், லக்ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன், கந்தசாமி குழந்தைவேலு, ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், வழக்கறிஞர் வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணனை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.