கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாயம் உள்ளதாக 'இஸ்ரோ' எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரோவின் கீழ் இயங்கும் 'நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்' எனப்படும் தேசிய தொலைஉணர்வு மையம் சார்பில் நம் நாட்டில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நிறைந்த பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. நம் நாட்டில் உள்ள 147 மாவட்டங்கள் நிலச்சரிவு அபாயம் நிறைந்த பகுதி என கண்டறியப்பட்டுள்ளது. இதில் உத்தரகண்ட்டில் உள்ள ருத்ரபிரயாக், தெஹ்ரி ஆகிய மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் உத்தரகண்டின் 13 மாவட்டங்கள் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் நிறைந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அபாயம் மிகுந்த மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தின் கோவை மாவட்டம் 36வது இடத்திலும் திண்டுக்கல் மாவட்டம் 41வது இடத்திலும் உள்ளன. மேலும் இப்பட்டியலில் கன்னியாகுமரி 43வது இடத்திலும் தேனி மாவட்டம் 59வது இடத்திலும் உள்ளன. 72வது இடத்தில் திருநெல்வேலியும், 85வது இடத்தில் நீலகிரியும் இடம்பிடித்துள்ளன.