தீபாவளியன்று ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை முக்கிய பெருநகரங்களில் துவங்க இருப்பதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொது கூட்டம் நேற்று நடைபெற்றது. நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 5ஜி சேவை தீபாவளியன்று தொடங்க உள்ளது என்றும், 5ஜி வணிகத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார். மேலும் டிசம்பர் 2023ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு நகரத்துக்கும் 5ஜி சேவை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிறுவனம் நாட்டிலேயே மிக அதிகமாக 1.88 கோடி ரூபாயை நடப்பாண்டு வரியாக செலுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆசியாவின் டாப்- 10 நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. அதோடு விரைவில் நுகர்பொருள் விற்பனை வணிகத்தில் இறங்க உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம், தொழில்நுட்பங்களுக்காக மெட்டா நிறுவனத்துடனும் , 5ஜி ஸ்மார்ட்போனுக்காக கூகுள், மைக்ரோசாப்ட், இன்டெல் ஆகியவற்றுடனும், தொழில்நுட்ப தேவைகளுக்காக 'குவால்காம்' நிறுவனத்துடனும் கூட்டு சேர்கிறது என்று அவர் தெரிவித்தார்.
முகேஷ் அம்பானியின் வாரிசுகளான ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோர், ஜியோ மற்றும் ரீடெய்ல் வணிக தலைமை பொறுப்பை ஏற்றுள்ளனர். கடைசி மகன் ஆனந்த் புதிய எரிசக்தி வணிகத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.