போக்குவரத்துக் கழகங்களுக்கான ஒருங்கிணைந்த இணையதளத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேருந்து இயக்கம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கும் வகையில் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ள 1800 599 1500 என்ற இலவச எண்ணை அமைச்சர் அறிமுகம் செய்தார். மாற்றுத் திறனாளிகள் ‘ஒகே கூகுள்' வழியாக இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, போக்குவரத்து கழகங்களுக்கான www.arasubus.tn.gov.in எனும் பொது இணையதள வசதியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் போக்குவரத்து கழகங்களின் அமைப்பு, அவற்றின் பயணிகள் சார்ந்த சேவைகள், பேருந்து வருகை நேரம், முன்பதிவு, பயணம் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆங்கிலம், தமிழில் தகவல்களை பெறும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘‘சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த இணையதள வசதிகளை கைபேசி செயலியில் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.