பக்தர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக, தேவசம்போர்டு ஆன்லைன் ரேடியோ சேவையை அறிமுகம் செய்கிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் அடுத்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேவசம்போர்டு மேற்கொண்டு உள்ளது. அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக "ரேடியோ ஹரிவராசனம்" என்ற பெயரில் ஆன்லைன் ரேடியோ சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்குகிறது.இந்த ஆன்லைன் ரேடியோ 24 மணி நேரமும் செயல்படும், மேலும் உலகமெங்கும் அய்யப்ப பக்தர்கள் கேட்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும். இதில் வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோவில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள், மற்றும் சபரிமலையின் வரலாறு பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும். மேலும், கோவில் பாரம்பரியங்கள் தொடர்பான நேர்காணல்கள் மற்றும் பேச்சுகளும் இடம்பெறும்.வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பை தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.