இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் மழை, வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்படுத்தில் 26 பேர் பலியாகினர்.
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் பெசிசிர் செலடான் என்னும் பகுதியில் கடும் மழை பெய்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு அதனை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 26 பேர் பலியாகினர். அதோடு 7 பேரை காணவில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
இந்த நிலச்சரிவின்போது மலையில் இருந்த பெரிய மரங்கள் கீழே விழுந்தன. பாறைகள் உருண்டு ஓடின. இதன் காரணமாக நதிக்கரையோர கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டருசான் என்னும் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 14 வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன. 20 ஆயிரம் பேர்களின் வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி விட்டது. சாலைகளில் ஓடும் வெள்ள நீர் காரணமாக மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டோரை மீட்பு குழுவினர் கடும் சிரமத்திற்கிடையே மீட்டு வருகின்றனர். இந்தோனேசியாவில் வெள்ள அபாய பகுதிகள் ஏராளமாக உள்ளன. இதனால் அங்கு லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தின் போது துன்பப்படுகின்றனர்.