சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் அடுத்த மாதம் 15 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் தலைமையில் மக்கள் செயல் கட்சியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இவர் கடந்த 2004 முதல் அந்தக் கட்சியின் பொது செயலாளர் ஆகவும் இருக்கிறார். கடந்த சில காலமாக இக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் மீது அதிக அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதன் காரணமாக இரண்டு எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில், 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகு பிரதமர் லீ அடுத்த மாதம் 15 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அதே சமயத்தில் தான் பதவி விலகிய பிறகு அதே நாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவி ஏற்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தலைமை மாற்றம் என்பது எந்த ஒரு நாட்டுக்கும் முக்கியமான தருணம் என்று கூறியுள்ளார்.