2015 ஜனவரி 9க்கு முன் இந்தியா வந்த இலங்கைத் தமிழர்களுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு.
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். இவர்களில் பலர் தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக இவர்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, 2015 ஜனவரி 9க்குப் முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் இனி சட்டபூர்வமாக தங்க அனுமதி பெறுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் அவர்கள் இனி சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படமாட்டார்கள். மேலும் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனைகளிலிருந்தும் இவர்கள் விலக்கு பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.