ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும் என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மக்களவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா, ஆன்லைன் விளையாட்டு பற்றிய வரைவு விதிகளில் ஆன்லைன் சூதாட்டம் இடம்பெறாதது ஏன், என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். மேலும் அரசியல் சட்டத்தின் எந்த அதிகாரத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வரைவு விதிகளை வெளியிட்டது என மணீஷ் திவாரி சாடினார்.
இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ஏற்கனவே 19 மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்டங்களை இயற்றி உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும். அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகு ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என கூறினார்.














