காப்பீட்டு பாலிசிகளுக்கு செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு, மார்ச் 31ஆம் தேதி வரை வரி விலக்கு பெறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வரி விலக்கு கிடையாது என சொல்லப்பட்டுள்ளது. இதனால், பல பேர் கடைசி நேரத்தில் பாலிசிகளை வாங்கினர். பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கணிசமான தொகையை பிரீமியமாக வசூல் செய்தன. அந்த வகையில், கடந்த 2023 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி யின் மொத்த பிரீமியம் 16.67% உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரீமியம் தொகை 1.99 ட்ரில்லியனிலிருந்து 2.02 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய காப்பீட்டு நிறுவனங்களை பொறுத்தவரை, எச்டிஎப்சி லைஃப் இன்சூரன்ஸ் 18.83%, எஸ்பிஐ லைஃப் 22%, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் 12.55% - அளவில் பிரீமியம் வசூல் செய்துள்ளன. எல்ஐசி, 16.67 பிரீமியம் வசூலுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த நிதி ஆண்டில், பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில், தனிநபர் ஒருவர் செலுத்தும் ஒரு பிரீமியம் 3.3%, தனிநபர் அல்லாத தனி பிரீமியம் 10%, என்ற ரீதியில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, தனிநபர் பிரிவில் எல்ஐசியின் பிரீமியம் வசூல் 10000 கோடியை தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் வசூலை விட மிகவும் உயர்வாகும்.