இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக லின்டி கேமரூன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள இங்கிலாந்து தூதரகம் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
அதில் கூறப்படுவதாவது, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதராக இருக்கும் அலெக்ஸ் எல்லிஸ் வேறு ஒரு தூதரகப் பணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். எனவே புதிய தூதராக லின்டி கேமரூனை இங்கிலாந்து அரசு நியமித்துள்ளது. அவர் இந்த மாதம் பதவியேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. லின்டி கேமரூன் 2020 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் தேசிய இணைய பாதுகாப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார். அதற்கு முன்பாக அவர் இங்கிலாந்தின் வடக்கு அயர்லாந்து அலுவலக இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தொடர் இழுபரி நீடித்து வருகிறது. இந்த சூழலில் லின்டி கேமரூன் நியமனம் நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.