ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு எதிராக ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் அரசு நடவடிக்கையை கண்டித்தும், தங்களுடன் பணி ஒப்பந்தம் செய்துள்ள ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு எதிராகவும், ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டி ஓலா, உபேர் ரபீட்டோ ஆட்டோக்களை கர்நாடக அரசு பறிமுதல் செய்து வருகின்றது. ஓலா, உபேர் நிறுவனங்களில் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பிய போக்குவரத்துதுறை 3 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.
ஆனால், நிறுவனங்கள் இதுகுறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள ஆர். டி. ஓ அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓலா, உபேர் உள்ளிட்ட செயலிகளில் முறைகேடு நடப்பதாகவும் அந்த நிறுவனத்துக்கு எதிராக தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கூறினர்.
விதிகளை மீறி அதிக பணம் வசூலிக்கும் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை விட்டுவிட்டு வாழ்வாதாரத்துக்காக போராடும் தங்களின் ஆட்டோக்களை பறிமுதல் செய்வது நியாயமா என்று ஓட்டுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.