லுப்தான்சா நிறுவனம் ஈரான் தலைநகரான டெஹரானுக்கு விமான சேவையை நாளை வரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஜெர்மன் நாட்டு விமான சேவை நிறுவனம் லுப்தான்சா. இந்த நிறுவனம் ஈரான் தலைநகரான டெஹரானுக்கு விமான சேவையை நாளை வரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் போர் சூழலே இந்த முடிவுக்கு காரணம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்க்போர்ட் நகரில் இருந்து டெஹரானுக்கு வாரத்திற்கு ஐந்து விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. முன்னதாக, இந்த விமான சேவை வியாழக்கிழமை வரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது சனிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. துணை விமான நிறுவனமான ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் வழக்கம் போல் டெஹரானுக்கு விமானங்கள் இயக்குவதை தொடர்ந்து வருகிறது.
வியன்னாவில் இருந்து டெஹரானுக்கு குறுகிய நேரம் என்பதால் அந்த சேவை தொடர்கிறது. அது மட்டும் இன்றி பகல் பொழுதில் விமானங்கள் இயங்கும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு ஈரான் தக்க பதிலடி கொடுக்கும் என்று அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்ற சூழல் உருவாகியுள்ளது.