மாதவரத்தில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி அக்டோபர் 2 - வது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரம்-சிறுசேரி இடையேயான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடி செலவில் நடைபெறுகிறது. இதில் 42.6 கிமீ தொலைவுக்குச் சுரங்கப்பாதை அமைய உள்ளது. இந்தப் பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைப் பணிக்காக, மொத்தம் 23 சுரங்கம் துளையிடும் இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, சீனாவிலிருந்து மாதவரத்துக்கு முதல் சுரங்கம் துளையிடும் இயந்திரம் கடந்த ஜூன் மாத இறுதியிலும், 2-வது சுரங்கம் துளையிடும் இயந்திரம் பசுமை வழிச்சாலைக்கு ஆகஸ்ட் மாதத்திலும் வந்தடைந்தன. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், மாதவரம் பால்பண்ணை முதல் தரமணி வரையிலான 21 கிமீ தொலைவுக்கு 2 சுரங்கப்பாதைக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது சுரங்கம் தோண்டுவதற்கு முன்பான ஆரம்பக்கட்ட சுவர்கட்டும் பணி நடந்து வருகிறது.
சீனா, புனே உட்பட 4 இடங்களில் 15 சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களின் தயாரிப்பு நடைபெற்று வருகின்றன. முதல் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தின் பணி அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.