மதுரை நகரம் சங்க காலத்திற்கு முன்பே செழித்திருந்த நகரமாகும். மதுரையின் அடையாளமான, புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் பற்றி பல இலக்கியங்கள் பேசுகின்றன. சைவத் திருமுறைகள் இந்தக் கோவிலைப் பற்றிப் பாடியிருக்கின்றன. எனவே, இது மிகப் பழமையானக் கோவிலென்பது உறுதியாகிறது. அந்தக் கோயில் சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பழைய கோவில் கட்டிடம் அழிந்து, தற்போதுள்ள கோவில் அமைப்பு 1623 – 1655 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது என்பது கோவிலின் வரலாறாகும். இந்தக் கோவில் ஒரு சிற்பக் களஞ்சியமாகும். இங்கு சுமார் 33,000 சிற்பங்கள் உள்ளன. தமிழர் கட்டிடக் கலைக்குச் சான்றாக இருக்கும் இந்த கோவில், உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கானப் பட்டியலில் முதல் 30-ல் இடம்பெற்றுள்ளது. மேலும், NDTV எடுத்த கருத்துக்கணிப்பில் இந்தியாவின் ஏழு அதிசயங்களில் மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்றாக உள்ளது.
சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில் அமைப்பானது திராவிட-விஜயநகரப் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக, எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் கொண்டு கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது. இந்தக் கோவிலின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டதாகும். இந்தக் கோவிலின், இராஜ கோபுரம் (கிழக்குக் கோபுரம்) கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்குக் கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும் கட்டப்பட்டதாகும். வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டில் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் கி.பி. 1878 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. வெவ்வேறு காலத்தில் கட்டப்பட்டாலும் அவை அனைத்தும் ஒன்றிணைந்து தமிழரின் பெருமையாக உயர்ந்து நிற்கின்றன. நான்கு கோபுரங்களில் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகவும், தமிழகத்தின் உயர்ந்த கோபுரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மேலும், இக்கோவிலில் உள்ள பொற்றாமரைக்குளம் ஒரு ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் அழகிய சிற்ப வேலைப்பாடுகள், அழகிய நுணுக்கங்களுடன், ஒவ்வொரு பிரகாரத்திற்கும் மண்டபத்திற்கும் வேறுபட்டு, தனித்தனிச் சிறப்புக்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. இந்தக் கோவிலின் தனிச் சிறப்புகளில் சில:
1. ஆயிரங்கால் மண்டபம்
தமிழகத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபமாகும். இது 1569 ஆம் ஆண்டு அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது. இதன் நீள அகலம் 76 x 72 மீட்டர் ஆகும். ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும், 15 தூண்களுக்குப் பதிலாக இரண்டு கோவில்களும் உள்ளன. மண்டபத்தின் வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் வருடம் அறுபதையும் காட்டும் சக்கரம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இது தமிழரின் வானவியலை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. மண்டபத்தின் தூண்களை எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் காட்சி அளிப்பது வியப்பான அமைப்பாகும். மேலும், இந்த மண்டபத்தின் மையத்தில் வீற்றிருக்கும் ஒருவரை மண்டபத்தின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் அவரை ஒரு தூணும் மறைக்காத வகையில், சிறந்த கணிதவியல் முறையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டு மதுரையின் பிரபல மருத்துவ நிபுணரான காமேஸ்வரன் ஒரு பெரும் குழுவுடன் இந்த மண்டபத்தை நவீன கருவிகளுடன் ஆராய்ந்தார். இந்த மண்டப அமைப்பில் ஒலியைக் கட்டுப்படுத்தும் அற்புதக் கட்டிட உத்தி பயன்படுத்தப்பட்டு இருப்பதைத் தன் ஆய்வின் முடிவில் அவர் கண்டுபிடித்தார். மண்டபத்தின் உள்ளே மிகுந்த அளவில் கூட்டம் இருந்தாலும் எப்போதாவது ஒரு முறை தான் 80 டெசிபல் என்ற அளவை எட்டுகிறது என்பது அவரது ஆய்வின் முடிவு. இதன் மூலம் தமிழகச் சிற்பிகள் ஒலி இயலில் மிகவும் தேர்ந்த நிபுணர்கள் என்பதோடு அழகுடன் விஞ்ஞானத்தையும் இணைத்து இந்த மண்டபத்தை உருவாக்கி இருப்பது உறுதியாகிறது. மேலும், வெறும் கற்களைக் கொண்டு, ஒலியை உள்வாங்கும் திறன் அமைத்தது உலகில் வேறெங்குமே இல்லாத அதிசயமாகும்.
2. இசைத் தூண்கள்
மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 7 இசைத் தூண்கள் உள்ளன. கோயிலின் வடக்கு ஆடி வீதியில் 5 இசைத் தூண்களும் ஆயிரங்கால் மண்டபத்தில் 2 இசைத் தூண்களும் உள்ளன. இந்தத் தூண்களைத் தட்டி நவரோஸ், குறிஞ்சி போன்ற இராகங்களை இசைக்க முடியும் எனச் சொல்லப்படுகின்றது.
3. யாளி
சிம்ம யாளியும் கஜ யாளியுமே பல கோவில்களில் காணப்படும். ஆனால், மீனாட்சி அம்மன் கோவிலில் இவற்றோடு சேர்த்து, வேறெங்கும் காணாத வகையில் நாய் யாளியும் காணப்படுகிறது.
4. நடராஜர் சிற்பம்
உலகில், வேறெங்கும் காணமுடியாத நடராஜர் சிற்பத்தை இங்கு மட்டுமே காண முடியும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் வகையில் உள்ள நடராசர் சிற்பம், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடும் வகையில் அமைந்துள்ளது.
5. சிற்பக் கலைச் சான்றுகள்
- விஜயநகரக் காலத்தில் கட்டப்பட்ட, சுவாமி சந்நிதி முன்னுள்ள நந்தி மண்டபம், ஒரே கல்லினாலானது.
- திருவிளையாடல் புராணத்திலுள்ள 64 திருவிளையாடல் காட்சிகள் சுவாமி சந்நிதி பிராகாரங்களில் தத்ரூபமானச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
- அஷ்டசக்தி மண்டபத்தின் வாயிலில் உள்ள விநாயகர் - முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு கதை வடிவில் மிகப் பிரம்மாண்டமாகச் சித்தரிக்கப்பட்டுது. காண்போரை மெய்மறக்கச் செய்யும் வகையில் மிக மிக உயிரோட்டமாக இந்தச் சிற்பம் அமைக்கப் பட்டுள்ளது.
- மீனாட்சி அம்மனின் சிலை, மரகதக் கல்லால் ஆனதாகும். கலைநயத்தோடு, மிகப் பெரிய மரகதச் சிற்பத்தை, நவீன தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லாத, பல நூறு வருடங்களுக்கு முன்னால் அமைத்திருப்பது அதிசயமாகப் பார்க்கப் படுகிறது.
6. கல்வெட்டுகள்
கல்வெட்டுகளே நமது வரலாற்றை நாம் அறிவதற்கு உதவும் முக்கியமான ஆவணங்களாகும். அந்த வகையில், இந்தக் கோவிலின் வரலாற்று முக்கியத்துவத்தை இங்கு கிடைத்த கல்வெட்டுகள் கூறுகின்றன.
- கிழக்குக் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் மாறவர்மன் குலசேகரனுடைய காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைத்தன. இந்தக் கல்வெட்டுகளின்படி கோயில் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குள்ளாகவே, அதாவது 1250ஆம் ஆண்டுவாக்கில் மிகப் பெரிய சேதத்தைச் சந்தித்திருக்கிறது என்பதும் கர்ப்பகிரகம், ஏழு நிலை கோபுரம், ஆடவல்லான் சன்னிதி போன்றவை அழிந்து, மீண்டும் கட்டப்பட்டுள்ளன என்பதும் தெரிய வருகிறது.
- மாலிக் காஃபூர் மதுரை மீது படையெடுததற்குப் பிறகு, ஐம்பதாண்டுகளுக்கு கல்வெட்டுகளே இல்லை. அதற்குப் பிறகு, விஜயநகரப் பேரரசு மதுரையை மீட்ட பிறகே மீண்டும் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. இது படையெடுப்பு நிகழ்ந்ததற்கான உறுதியான ஆதாரமாகத் திகழ்கிறது.
- கோயிலைச் சேர்ந்தக் கல்வெட்டுகளைத் தவிர, வைகை நதிக் கரையில் கண்டெடுக்கப்பட்டு, தற்போது கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் செயல்பட்டு வரும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளும் தமிழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. கி.பி. 700ஆம் ஆண்டைச் சேர்ந்தப் பழமையானக் கல்வெட்டு, நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னன் வைகையில் கால்வாய் வெட்டி, மதுரை தவிர்த்த வேறு பகுதிகளுக்கு நீரைக் கொண்டு சென்ற தகவல் இருக்கிறது.
தமிழரின் உயரிய பண்பாடு, வரலாறு, கலாச்சாரம் மற்றும் சிற்பக் கலை ஆகியவற்றின் உச்சமாக இந்தக் கோவில் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.