வரும் மே 1ம் தேதி முதல், ஆதார் அட்டை, பான் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பள்ளி சான்றிதழ், சொத்து பத்திரங்கள் போன்ற அனைத்து வித அரசாங்க ஆவணங்களிலும் தாயார் பெயரை கட்டாயமாக குறிப்பிட மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பெற்றோர் இல்லாத அனாதைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 1, 2014 க்கு பிறந்த அனைவருக்கும் இந்த புதிய விதி கட்டாயமாக்கப்படுவதாக மகாராஷ்டிரா அமைச்சரவை தெரிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரரின் பெயருக்கு அடுத்ததாக தாயாரின் பெயர் இடம்பெற வேண்டும். அதனை அடுத்து, தந்தையின் பெயர் இடம்பெற வேண்டும். அத்துடன், பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் போது, அவர்களின் பெயரை மேற்குறிப்பிட்ட முறையில் பதிவு செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதே சமயத்தில், திருமணம் ஆன பெண்களுக்கு இந்த விதி பொருந்தாது. ஏற்கனவே உள்ள பழைய முறைப்படி, பெண்ணின் பெயருக்கு அடுத்து கணவரின் பெயர் இடம்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.