மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் முதிய வயது கோடீஸ்வரரும் ஆன கேஷப் மஹிந்திரா, தனது 99 வது வயதில் காலமடைந்துள்ளார். முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்ற கேஷப் மஹிந்திரா, 1947 ஆம் ஆண்டு தனது தந்தையின் மஹிந்திரா குழுமத்தில் பணியில் சேர்ந்தார். 1963 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து 48 ஆண்டுகள் மஹிந்திரா குழுமத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். டிராக்டர்கள் மற்றும் எஸ்யூவி கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள மஹிந்திரா குழுமம், மென்பொருள் சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் சுகாதாரத் துறைகளில் வளர்ச்சி பெறுவதற்கு இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக சொல்லப்பட்டுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் தற்போதைய தலைவர் ஆனந்த் மஹிந்திரா இவரது மருமகன் ஆவார்.
கேஷப் மஹிந்திரா, பிரெஞ்சு அரசின் செவாலியர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில், பிரதமர் அலுவலகத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.