டொமினிகன் குடியரசில் நடந்த பெரும் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது.
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் உள்ள பிரபல இரவு கேளிக்கை விடுதியான "ஜெட் செட்"யில் கடந்த திங்கட்கிழமை இசைக்கச்சேரி நடைபெறும் போது பெரும் விபத்து நிகழ்ந்தது. அங்கு ஏராளமான மக்கள், அரசு அதிகாரிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திடீரென விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது, இதனால் 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், 12 மணி நேரத்திற்கு பிறகு, இடிபாடுகளுக்குள் சிக்கிய சிலரை மீட்டனர். படுகாயம் அடைந்த 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர், மேலும் பலர் இறந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், இறந்தவர்களில் பலர் சுற்றுலா பயணிகள் என்பதால் அவர்களை அடையாளம் காண்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காக போலீசார், உடைமைகளை அடிப்படையாக வைத்து அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.