காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், திங்கள் அன்று நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் 7897 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார். காந்தி குடும்பத்தில் அல்லாத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், சசி தரூர், கார்கேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், கட்சியின் மறுமலர்ச்சி தொடங்கியுள்ளதாக கூறினார்.
திங்கட்கிழமை அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், இந்தியா முழுவதிலும் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 9915 பேர் வாக்களிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் 9500 க்கும் மேற்பட்டோர் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். இந்தத் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறைப்படி நடந்ததால், யாருக்கு யார் வாக்களித்தனர் என்பது போன்ற விவரங்கள் தெரிய வராது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்புத் தலைவர் மதுசூதனன் மிஸ்திரி, "கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தல் அமைதியான முறையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மை உடையதாகவும் நடைபெற்றது" என்று கூறினார்.
இந்தியா முழுவதும் உள்ள 68 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பெட்டிகள் தில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக, பிரமோத் திவாரி, கொடிக்குனில் சுரேஷ், கவுரவ் கோகாய், சையது நசீர் உசைன், குல்ஜீத் சிங் பக்ரா, குர்தீப் சிங் சப்பல் ஆகியோர் பங்கேற்றனர். சசி தரூருக்கு ஆதரவாக, கார்த்தி சிதம்பரம், அதுல் சதுர்வேதி, சுமேத் கேக்வால் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்றனர்.