தமிழர் கட்டட அறிவியல் அற்புதங்கள் - மாமல்லபுரம்
கற்களையெல்லாம் கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும் புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். பல்லவர்களின் கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுரக் கோயில்கள் 1984ல் யுனெஸ்கோ பாரம்பர்ய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டவையாகும். தற்போது மாமல்லபுரத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு மிக்க பெருமையை அளிக்கும் இவ்வூர், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு துறைமுகமாக இருந்து, கடல் நீர் உட்புகுந்ததனால் அழிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
கற்பாறைகளில் குகைக் கோவில்களை அமைத்து கோவிற்கலையில் ஒரு புதுமையைப் புகுத்தியப் பெருமை முதலாம் மகேந்திரவர்ம பல்லவனைச் சேரும் (600-630). தந்தையைப் பின்பற்றி, முதலாம் நரசிம்மவர்மன் (630-668) குன்றுகளைக் குடைந்து குகைக் கோவில்களை (Rock-cut temples) மாமல்லபுரத்தில் அமைத்தார். இவற்றைத் தவிர மலையைச் செதுக்கி, வெட்டுக் கோவில்கள் (Cut-out-temples) அமைக்கும் புதுமையையும், திறந்தவெளியில் இயற்கையாக அமைந்த பாறைகளில் புடைப்புச் சிற்பங்களை அமைக்கும் புதுமையையும் புகுத்தினார். இவ்வாறு, பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தில் குடைவரைக் கோவில்கள், வெட்டுக் கோவில்கள், பாறைச் சிற்பங்கள், கட்டுமானக் கோவில்கள் ஆகிய நால்வகை கோவில்களை அமைத்து இத்துறைமுகப் பட்டினத்தை ஒரு சிற்பக் களஞ்சியமாக மாற்றினார்கள். மேலும், அது வரையில் தமிழகத்தில் அமைக்கப்பட்டக் கோவில்கள் அனைத்தும் செங்கற்களால் ஆனதால் அழிந்தன. எனவே, முதன் முதலில் அழியாக் கோவில்களை அமைத்த பெருமையும் பல்லவர்களையே சேரும்.
மாமல்லபுரத்தில் ‘அர்ஜுனன் தவம்‘ என்ற சிற்பக் காட்சி உள்ளது. இயற்கையாக அமைந்த ஒரு குன்றின், 9மீட்டர் உயரம் வரை உள்ள பாறைப்பகுதி செதுக்கப்பட்டு, புடைப்புச் சிற்பங்களாகக் காட்சித் தருகிறது. கடவுளர்கள், தேவர்கள், மனிதர்கள், யானை, சிங்கம், மான் முதலிய மிருகங்கள், பறவைகள் என்று சுமார் 100 புடைப்புச் சிற்பங்களை ‘அர்ஜுனன் தவம்’ சிற்பத்தில் காணலாம். அர்ஜுனன் தவம்’ ஒரு ‘சிற்ப அதிசயம்’ ஆகும். எந்தவித தொழில்நுட்பமும் வளராத காலத்தில் இது போன்ற ஒரு பாறைச் சிற்பத்தை உருவாக்கியது பெரும் சாதனையாகும்.
மலைப் பகுதியையும், பாறைகளையும் குடைந்து அமைக்கப்பட்ட பல்லவர் குடைவரைக் கோவில்கள் பல மாமல்லபுரத்தில் உள்ளன. இதன் நளினம் மற்றும் ஒப்பனை அழகு எளிமை ஆகியவற்றுக்காக இக்கோவில்கள் போற்றப்படுகின்றன. குகைக் கோவில்களில் பெரும்பாலானவை மண்டபக் கோவில்களாக விளங்குகின்றன. மகிஷாசுரமர்த்தினி குகை மண்டபம் மற்றும் கிருஷ்ண மண்டபம் ஆகியன பல்லவர்களின் சிற்பக்கலைக்குச் சான்றாக நிற்கின்றன. கிருஷ்ண மண்டபம், ஸ்ரீ கிருஷ்ணரின் சிறப்புத் தொகுப்பாக உள்ளது. இதில் அவர் காத்தருளும் உயிர்களான மனிதர்கள், புள், பூச்சி இனங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆய்வாளர்கள் பல உயிரினங்களையும் அடையாளப் படுத்தியுள்ளார்கள். எனவே இது ஒரு சிற்பக் கருவூலமாகக் கருதப்படுகிறது.
பாறைகளில் இருந்து சிலப் பகுதிகளை வெட்டியெடுத்து, மீதமுள்ள பகுதியைச் சிற்பமாகவோ கோவிலாகவோ மாற்றும் ஒப்பில்லாதத் திறமை பல்லவர்கள் காலத்தில் இருந்தது. ஐந்து கல் ரதங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள யானை, நந்தி முதலிய சிற்பங்கள் அதற்குச் சான்றாகும். ஐந்து ரதங்களில் மிகப் பெரியதும், சிறந்ததுமான தர்மராஜ ரதம் மூன்று மாடிகளைக் கொண்டுள்ளது. எவ்விதத் தொழில்நுட்பமும் இல்லாதக் காலத்தில் மூன்று மாடிகளை உருவாக்கியிருப்பது மிகவும் வியப்பானதாகும்.
தமிழ்நாட்டில் முதன் முதலில் கற்களால் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் ராஜசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகும். மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் ஆசியாவிற்கு வந்த ஐரோப்பிய வணிகர்கள் மாமல்லபுரம் பகுதியை ஏழு அடுக்கு தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு தூபிகளில் ஒன்று இந்த கடற்கரைக் கோயில் என்று நம்பப்படுகிறது. மீதமுள்ள 6 கோயில்கள் கடலுக்குள் மூழ்கியே இருக்கின்றன. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில், முழுவதுமாகக் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட, சிதைந்துபோன ஒரு பழைய கோயில் கடலுக்குள் இருப்பது தெரிய வந்தது. இந்நிகழ்வு ஐரோப்பியர்கள் குறிப்பிட்ட "ஏழு அடுக்கு தூபிகள்" என்பதை உறுதிப்படுத்துகிறது. சுனாமியானது மேலும் சில சிங்கங்கள், யானைகள் மற்றும் மயில்களின் கற்சிற்பங்களை வெளிக்காட்டியது. இச்சிற்பங்கள் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில், பல்லவர் காலத்தின் போது, சுவர்கள் மற்றும் கோயில்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். மாமல்லபுரத்துக் கல்வெட்டுக்கள், இரண்டாம் நரசிம்மன் என்ற இராஜசிம்மன், இக்கோவில் அமைக்கும் பணியைச் செய்தான் என்பதை உறுதிப் படுத்துகின்றன. இந்தக் கடற்கரைக் கோயிலின் கட்டட அமைப்பானது பிற்காலக் கோவில்களிலும் பின்பற்றப்பட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள மற்றொரு அதிசயம் கிருஷ்ணரின் வெண்ணை உருண்டை ஆகும். இது, வெட்ட வெளியில் உள்ள ஒரு உருண்டையான பாறையாகும். எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் இருப்பது போன்று தோற்றமளிக்கும் இது, புவியீர்ப்பு விசையைத் தோற்கடித்து நிற்கும் அதிசயமாகும். இது மட்டுமல்ல, மாமல்லபுரத்துச் சிற்பங்கள் ஒவ்வொன்றுமே அதிசயமாவை ஆகும். உலகம் உள்ளவரையில், தமிழர்களின் பெருமையை இந்த அதிசயச் சிற்பங்கள் கூறிக் கொண்டே இருக்கும்.