நேற்று, சிங்கப்பூருக்கு சொந்தமான 7 செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. அவை வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், 7 செயற்கைக்கோள்களில் 3 செயற்கைக்கோள்கள் அரியலூரைச் சேர்ந்த இளைஞர் சண்முகசுந்தரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், சென்னை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பட்டப் படிப்பை பயின்றுள்ளார். அதை தொடர்ந்து, சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் செயற்கை கோள்களின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். அதே வேளையில், பல்கலைக்கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் செயற்கைக்கோள் திட்டங்களில் பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக, செயற்கைக்கோள்களின் கட்டமைப்பு, வடிவமைப்பு மற்றும் திட்ட முதன்மை பொறியாளர் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட ஆர்கேட், ஸ்கூப் 2, வெலாக்ஸ் ஆகிய 3 செயற்கைக்கோள்களை அவர் வடிவமைத்துள்ளார்.
அவர் வடிவமைத்த ஆர்கேட் செயற்கைக்கோள், குறைந்த உயரத்தில் பயணிக்கும் செயற்கைக்கோள் ஆகும். இது வளிமண்டலத்தின் மேல் அடுக்கு மற்றும் பூமத்திய ரேகை பகுதியின் இயக்கவியல் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும். ஸ்கூப் 2 என்ற சிறிய வகை செயற்கைக்கோள், தொலைதூர தகவல் தொடர்பு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட உள்ளது. வெலாக்ஸ் செயற்கைக்கோள் விண்வெளியில் பயன்படுத்தப்படும் பொருட்களைக் குறித்த ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சண்முகசுந்தரம், தனது ஆராய்ச்சி நிறைவடைந்த பின்னர், தமிழக பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார்.