கடந்த மே மாதம் முதல், மணிப்பூரில் உள்ள பழங்குடி சமூகத்தினர் இடையே வன்முறை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் வன்முறை அரங்கேறியுள்ளது. குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நேற்றைய வன்முறையில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே உள்ள காமன்லோக் கிராமத்தில் நேற்று இரவு இந்த வன்முறை சம்பவம் அரங்கேறி உள்ளது. வீடுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குண்டு வீச்சில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை தொடர்பாக தகவல் கிடைத்த பிறகு, பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் நவீன ஆயுதங்கள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.