இந்தியர்களின் வாழ்வியலில் மஞ்சள் இல்லாமல் ஒரு நாள் கூட முழுமை அடையாது என்று கூறும் அளவிற்கு மஞ்சள் நம் வாழ்க்கை முறையில் இன்றியமையாதப் பொருளாக இருந்து வருகிறது. முழு மனதுடன் நாம் மஞ்சளை ஏற்றுக் கொண்டிருக்கும் விதமும் மஞ்சள் உபயோகத்தின் மீது கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையும் பல்லாயிரம் ஆண்டுகள் பரிச்சயத்தின் மூலமாக மட்டுமே வர முடியும். அதனை உறுதி செய்யும் விதத்தில் இந்தியாவின் மஞ்சள் பயன்பாடு குறித்த சான்றுகள் சிந்து சமவெளி நாகரிகம் முதலே கிடைக்கின்றன.
சிந்துவெளி மக்கள் மஞ்சளை விளைவித்தது அகழ்வாராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலும், அங்கு கிடைத்தப் பானைகளை ஆராய்ந்ததில் மஞ்சள், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை சமையல் செய்யப் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மஞ்சளின் தாயகம் பண்டைய இந்தியாவாகும். இந்தியாவிலிருந்து கி.பி.700 ஆம் ஆண்டுகளில் சீனாவிற்கும், கி.பி. 800 ஆம் ஆண்டளவில் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும், 1200களில் மேற்கு ஆப்பிரிக்காவிற்கும் மஞ்சள் சென்றடைந்தது. 13ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுளுக்கு அராபிய வர்த்தகர்களினால் மஞ்சள் எடுத்துச் செல்லப்பட்டப் பின்னர் உலகம் முழுதும் மஞ்சள் பிரபல்யம் அடையத் தொடங்கியது. ஆனால், தமிழர்கள் சங்ககாலம் முதலே மஞ்சளை வர்த்தகம் செய்து வந்துள்ளது இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளது. சோழ வளநாட்டின் கழனியில் மஞ்சள் விளைவதைப் பற்றி “காய்க்க முகின் கமழ் மஞ்சள்” என்றப் பட்டினப்பாலைப் பாடல் கூறுகின்றது. மேலும், மஞ்சள், இஞ்சி, மிளகு முதலியன கல்தரையில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன என்பதை “இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் பல்வேறு தார மொடு கல்லகத்து ஈண்டி” என்ற மதுரைக் காஞ்சி வரிகள் விளக்குகின்றன. இதன் மூலம், மஞ்சள் என்பது தமிழர்கள் வாழ்வில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேரூன்றி விட்டது என்பதும் உறுதியாகிறது.
தமிழர் வாழ்வில் மஞ்சள் பலவகையில் முக்கியம் வாய்ந்ததாக விளங்குகிறது. பல்வேறு சடங்குகளும் மரபுகளும் மஞ்சளைச் சுற்றியே காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, புதிதாக ஒரு வீட்டில் குடிபுகுபவர்கள் உப்பு மற்றும் மஞ்சள் ஆகிவற்றையே முதலில் கொண்டு செல்லும் வழக்கம் உள்ளது. மேலும், புத்தாடை அணிவதற்கு முன்பு மஞ்சளை நீரில் தேய்த்து அதை ஆடையில் வைத்துக் கொள்ளும் மரபு தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவது பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு திருவிழாக்களில் மஞ்சள் தண்ணீரை ஊற்றி விளையாடுவது இன்றளவிலும் மரபாகத் தொடரப்பட்டு வருகிறது. அனைத்திற்கும் மேலாக மஞ்சளைக் கடவுளாகவே தமிழர்கள் பாவித்து வந்திருக்கின்றனர். எனவே தான், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடும் முறை இன்றளவும் காணப்படுகிறது. இத்தனைச் சிறப்பு வாய்ந்ததாக மஞ்சளைக் கருதுவதற்கு அதன் மருத்துவக் குணங்களே காரணமாகும்.
மஞ்சளின் மருத்துவக் குணங்கள் தொடர்பானப் பட்டியலுக்கு முடிவே கிடையாது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், பாரம்பரிய சீன மருத்துவம் எனப் பல மருத்துவ முறைகளில் மஞ்சள் உபயோகிக்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட மருத்துவ முறைகள் மட்டுமின்றி, பாட்டி வைத்தியம் மற்றும் வீட்டு வைத்தியத்திலும் மஞ்சள் முன்னுரிமை பெறுகிறது. மஞ்சள் கலந்த பால் அருந்துவது, மஞ்சளைச் சுட்டு அதன் புகையை முகர்வது, எண்ணெய் மற்றும் மஞ்சளைக் கலந்து காயங்களில் பூசுவது என்று வீட்டு வைத்திய முறைகளிலும் மஞ்சளின் பயன்பாடு நீண்டு கொண்டே போகிறது. நவீன ஆராய்ச்சிகள் மஞ்சளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் சி, ஈ, நியாசின், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளதாகக் கூறுகின்றன. இதனை நம் முன்னோர்கள் உணர்ந்ததாலேயே பல்வேறு நோய்களைக் குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக மஞ்சளை நமக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்கள். இவ்வாறு, ஒரு பொருள் பல பயன் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மஞ்சள் இருப்பதை அகத்தியர் குணபாடம் பின்வரும் பாடல் வரிகளில் கூறுகிறது.
பொன்னிறமாம் மேனி புலானாற்ற மும்போகும்
மன்னு புருட வசியமாம் பின்னியெழும்
வாந்திபித்த தோடமையம் வாதம் போற் தீ பனமாங்
கூர்ந்தமஞ்ச ளின்கிழங்குக்கு
தலைவலிநீ ரேற்றஞ் சளையா மேகம்
உலைவுதரும் பீநசத்தி னுமே வலிசுரப்பு
விஞ்சு கடிவிட மும் வீறுவிர ணங்களும் போம்
மஞ்சள் கிழங்குக்கு மால்
தற்கால ஆய்வுகளும் மஞ்சள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் எனவும் மூளை தொடர்பான மறதி நோய் மற்றும் மன அழுத்த பிரச்னைகளைப் போக்கும் ஆற்றல் கொண்டது எனவும் குறிப்பிடுகின்றன. சித்த மருத்துவம், விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றும் மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும் என்றும் வலியுறுத்துகிறது. ஆயுர்வேதம், உடலில் உள்ள வெளிக்காயங்கள் விரைவில் குணமாக மஞ்சளே சிறந்த மருந்து என்று சொல்கிறது. இவ்வாறு, மஞ்சளின் எண்ணற்ற மருத்துவப் பலன்களை
நீர்க்கடுப்பு காசமொடு நீடு விடாசுரமுந்
தீர்க்க நமைச்சல் வெப்புஞ் சேர்மலமும் பார்க்கு ண்மிக
அஞ்சியே யேகுமஞ்ச ளாம்வத்தி ரம்புனைந்தால்
வஞ்சியே நன்றாய் வழுத்து
என்ற வரிகள் மூலம் அகத்தியர் கூறியுள்ளார். மேலும், மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் முறை, நெடுங்காலமாகப் பெண்களுக்கு நோய்கள் ஏற்படாமல் தடுத்ததில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அகத்தியரின்
மஞ்சட் குளிதனக்கு மாறாத்துர்க் கந்தமொடு
விஞ்சுமுக சாட்டியமும் விட்டகலுந் கொஞ்சலுறும்
ஐய மொழியு மடர்வியர்வுங் காணாது
வைய மதனில் வழுத்து
என்றப் பாடல் வரிகள், மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் உடலில் ஏற்படும் நாற்றம், தோல் நோய்கள், வியர்வையில் உண்டாகும் கிருமிகளின் மூலம் ஏற்படும் நோய்கள் போன்றவை நீங்கும் என்பதை உணர்த்துகிறது.
தாவரவியல் ரீதியில் இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சளின் அறிவியல் பெயர், 'கர்க்குமா லாங்கா’ என்பதாகும். மஞ்சளில் உள்ள 'கர்க்குமின்’ என்ற வேதிப்பொருளின் பெயரைக் கொண்டு இது பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கர்க்குமின்தான் மஞ்சளுக்கு மஞ்சள் நிறத்தைத் தருவதோடு, மஞ்சளின் நற்பலன்கள் அனைத்துக்கும் காரணியாக விளங்குகிறது. ஆய்வுகளின் படி, மஞ்சள் முதன்முதலில் சாயப் பொருளாகப் பயிர் செய்யப்பட்டு, பெரும்பாலும் நிறமூட்டவே பயன்படுத்தப்பட்டது. பின்னர் மஞ்சள் என்பது சிறந்த கிருமி நாசினி என்பது தெரிய வந்தது. எனவே, அது வரையில் ஒப்பனை மற்றும் அலங்காரப் பொருளாக இருந்து வந்த மஞ்சள் பல நோய்களை விரட்டும் அருமருந்தாகச் செயல்படத் தொடங்கியது. பிற்காலப்பகுதியில் அது ஒரு வாசனைத் திரவியமாகவும் பயன்பட்டது.
கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என பலவகையில் நன்மைத் தருவதாக இருக்கின்றன. கப்பு மஞ்சள், புண்களை ஆற்றவும், சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பயன்படுகிறது. கறி மஞ்சள் என்பது பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்துவதாக அமைகிறது. விரலி மஞ்சள் உடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கிறது. மர மஞ்சள் சிறந்த ஒப்பனைப் பொருளாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு, நம் வாழ்வோடு ஒன்றிணைந்தப் பொருளாக மஞ்சள் அன்று தொடங்கி இன்று வரையிலும் இருந்து வருகிறது. இன்றும் கூட, மஞ்சளின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உலகின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 75 சதவீதம் இந்தியாவில் விளைவிக்கப் படுகிறது. இவ்வாறு, மஞ்சள் நமது அழகு, மருந்து, உணவு, பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மட்டுமின்றி அடையாளமாகவும் ஆகின்றது. மஞ்சளின் மகிமையை உணர்ந்து அதன் மகத்துவத்தைக் காப்போம்.