ஷாவ்மி குழுமத்தின் இந்தியப் பிரிவு முன்னாள் தலைவரான மனு குமார் ஜெயின், ஷாவ்மி குடும்பத்திலிருந்து 9 ஆண்டுகள் பணிக்குப் பிறகு விலகியுள்ளார். சமூக வலைத்தளத்தில் தனது விலகலை குறித்து அவர் பதிவிட்டுள்ளார். அதில், "ஷாவ்மி நிறுவனம் தற்போது வலிமையான தலைமையின் கீழ் செயல்படுகிறது. எனவே, சரியான நேரத்தில், நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்" என தெரிவித்துள்ளார். அவர் தனது அடுத்த பணி குறித்து எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை. மேலும், சில காலத்திற்கு ஓய்வு எடுத்துவிட்டு அடுத்த சவாலை ஏற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மனு குமார் ஜெயின், ஷாவ்மி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவராக இருந்தார். தொடர்ந்து, நிறுவனத்தின் சர்வதேச தலைமை பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். வெறும் 7 ஆண்டுகளில், ஷாவ்மி நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சிக்கு இவர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்தியாவின் நம்பர் ஒன் கைபேசி நிறுவனமாக ஷாவ்மி வளர்ச்சி அடைந்தது இவரது காலகட்டத்தில் தான். எனவே, ஷாவ்மி நிறுவனம், அவரது பங்களிப்புக்காக நன்றிகளைத் தெரிவித்துள்ளது.