பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும் சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
பட்டாசு வெடிப்பதால் ஒலி மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என கடந்த 2018 ல் வழக்கு தொடரப்பட்டது. அதனை தொடர்ந்து பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தவும் அதனுடன் சரவெடி தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் 50 சதவீதம் வரை பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் ஏராளமான தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அதனை தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தியதில் மத்திய, மாநில அரசு பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என இன்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். அதன்படி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து உள்ளனர்.