மாருதி சுசுகி நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 33% உயர்ந்து, 3130 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 14.68% உயர்ந்து. 33,308.7 கோடி ஆக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் யு வி ரக வாகனங்களுக்கு அதிக தேவை இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், மொத்தம் 501207 எண்ணிக்கையிலான மாருதி சுசுகி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வருடாந்திர அடிப்படையில் 7.57% உயர்வாகும். உள்நாட்டு வாகன விற்பனையில் 6.3% மற்றும் ஏற்றுமதியில் 15.8% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல் முறையாக, 2 மில்லியன் வருடாந்திர வாகன விற்பனை எண்ணிக்கை இலக்கை மாருதி சுசுகி தாண்டி உள்ளது. நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 38% உயர்ந்து 3908 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.