பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் நவாஸ் பொறுப்பேற்க உள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த எட்டாம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதனுடன் சிந்து, பஞ்சாப், கைபர் பக்தன்கவா போன்ற மாகாண பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பஞ்சாப் மாகாண பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவையின் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை பஞ்சாப் மாகாண ஆளுநர் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பேரவை உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு புதிய அரசை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும். இதில் மரியம் நவாஸ் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த மாகாணத்தின் முதல்வராக ஒரு பெண் பொறுப்பேற்க உள்ளது இதுவே முதல் முறையாகும். இவர் முன்பே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பஞ்சாப் மாகாண பேரவை 371 இடங்களைக் கொண்டது.
மாகாண முதல்வர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தற்போது மரியம் நவாசுக்கு அளிக்கப்படுகிறது. மாகாண உயர் அதிகாரிகளுடன் அவர் இப்பொழுது ஆலோசனைகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் வந்துள்ளன.