தமிழகத்தில் பொது இடங்களில் தேவைப்பட்டால் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவுதான். கொரோனா பாதித்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் போட வேண்டிய அவசியம் தற்போது இல்லை. தேவைப்பட்டால் கட்டாயமாக்கப்படும். இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 1-ந்தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது. நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்று கூறினார்.














