அமெரிக்காவில் இரும்பு பாலத்தில் சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்பட்டதில் ஆறு பேர் பலியாகி உள்ளதாக மேரிலாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே பிரான்சிஸ் ஸ்காட் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் டாலி என்ற சரக்கு கப்பல் அந்த வழியாக கொழும்பு நோக்கி சென்றது. கடந்த திங்களன்று நள்ளிரவில் அந்தப் பாலத்தின் தூண் மீது சரக்கு கப்பல் மோதியது. இதனால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்பொழுது அந்த பாலம் வழியாக சென்ற ஏழு வாகனங்கள் ஆற்றுக்குள் மூழ்கியது. அதில் இருந்த எட்டு பேரில் இருவர் மீட்கப்பட்டனர். மேலும் 6 பேரை அமெரிக்க காவல் படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், கப்பல் விபத்துக்குள்ளான நேரம் மற்றும் தண்ணீரின் வெப்பநிலையை கணக்கிடும்போது அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இருப்பினும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும், இதனால் அங்கு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியுள்ளதாகும் கூறியுள்ளனர். டாலி கப்பலில் இருந்த பணியாளர்கள் மொத்தம் 22 பேர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.