சில வருடங்களுக்கு முன்னர் வரையில் மது அருந்துவது குற்றச் செயலைப் போல கருதப்பட்டு வந்தது. ஆனால், சமீபக் காலங்களில் அது ஒரு அன்றாட நிகழ்வு போல மாறிவிட்டது. முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், பெருகிவிட்ட மதுக்கூடங்களே குடிப்பழக்கம் பெருகியதற்கான முக்கியக் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் முற்றிலும் புதிய கோணத்தில் இதனை அணுகுகிறது. பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் பங்கேற்ற இந்த ஆய்வில், வசிப்பிடத்தின் அருகிலோ, பணியிடத்தின் அருகிலோ, குழந்தைகளின் கல்வி நிலையம் அருகிலோ மதுக்கூடங்கள் இருந்தால், அவை பெற்றோரின் குடிப்பழக்கத்தை மேலும் அதிகமாக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.
ட்ரக் அண்ட் ஆல்கஹால் டிபெண்டென்ஸ் (Drug and Alcohol Dependence) என்ற இதழில், பிரிட்ஜெட் பிரெஸ்த்லர் என்பவர் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன. 2015 ஆம் ஆண்டில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 1599 பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வின் படி, பணிச்சுமை அதிகமாகும் நாட்களில், அலுவலகத்தின் அருகில் உள்ள மதுக்கூடங்களுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்களும்; கடைகளுக்குப் பொருள் வாங்கச் சென்று, வீடு திரும்பும் வழியில் மதுக்கூடங்களுக்குச் செல்பவர்களும் கணிசமாக அதிகரித்துள்ளனர். மேலும், வீட்டின் அருகிலேயே மதுக்கூடங்களைக் கொண்ட பெற்றோர்கள் மற்ற பெற்றோர்களை விட குடிப்பழக்கம் அதிகம் உடையவர்களாக மாறியுள்ளனர் என்பதும் குழந்தைகளுடன் உணவகங்களுக்குச் செல்லும் பொழுது சாதாரண உணவகங்களை விட மது குடிக்கும் வசதி கொண்ட உணவகங்களுக்குச் செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளதம் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே, வசிப்பிடத்தின் அருகிலேயே மதுவிற்கான வாய்ப்புகள் அகலமாவது, குடிப்பழக்கத்தை அதிகமாக்குகிறது. மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, குடிப்பது மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது பற்றிய தவறான முன்னுதாரணமாக இருக்கவும் இந்த மதுக்கூடங்கள் வாய்ப்பளிக்கிறது.