நடனக் கலையின் தோற்றம் என்பது, விலங்குகளின் அசைவைப் பார்த்த மனிதன் தானும் அதே போல் அசைந்து ஆட முற்பட்டபோது ஏற்பட்டதாகும். அதன் வழி வந்தவையே புலிவேச நடனம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயில் ஆட்டம், காளை ஆட்டம் ஆகியனவாகும். மயில் தனது நீண்ட தோகையை விரித்து அழகாக அசைந்தாடி வருவதைப் போல ஆடும் மயில் ஆட்டம் இந்தியாவின் பல பகுதிகளிலும் “மயூர் நாட்டியம்” என்னும் பெயரால் ஆடப்படுகிறது. இது சிறுவர், சிறுமியர்களை மகிழ்விக்கும் சிறந்த கலையாக உள்ளது. தமிழகத்தில், மயிலாட்டம் என்பது எளிய மக்களின் கலை வடிவமான நாட்டுப்புற நடனம் மற்றும் தமிழகத்தின் செவ்வியல் நடன வகையான பரதநாட்டியம் ஆகிய இரண்டிலுமே தனி கவனம் பெற்றச் சிறப்பு நடனக் கலையாகும்.
தஞ்சையில் வாழும் நாட்டுப்புறக் கலைஞர்களின் கூற்றுப்படி, திருச்சியைச் சார்ந்த சுந்தரராவ் என்பவரே மயில் நடனத்தை முதன் முதலில் கண்டுபிடித்து ஆடியவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் சிங்காரம் என்னும் கோலாட்ட ஆசிரியர் மயில் தோகை சுருங்கி விரியும் தன்மையிலான தோகை இயந்திரத்தை அமைத்து, ஆடுபவர் குனிந்தால் தோகை விரிவது போலவும், நிமிர்ந்தால் சுருங்குவது போலவும் அமைத்தார். இவரிடமிருந்து இந்த நடனத்தைக் கற்றுக்கொண்ட தஞ்சையைச் சேர்ந்த வித்துவான் என்.சின்னையா என்பவர், இதனை மேலும் புகழடையச் செய்தார். நாட்டுப்புறக்கலை வடிவ மயிலாட்டத்தில், தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே மயில் வடிவில் ஆடி வந்தனர். பிற்காலத்தில், மயிலாட்டம் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் ஆடும் வடிவமாக மாற்றம் அடைந்தது. நாட்டுப்புறக் கலையாகப் புகழடைந்தப் பிறகு, மயிலாட்டம், செவ்வியல் நடனமான பரத நாட்டியத்தில் இடம்பெறத் தொடங்கியது. பரதநாட்டியத்தில் இந்த நடனத்தைப் பெண்கள் ஏற்று ஆடும் வழக்கம் இன்றைய நிலையில் காணப்படுகிறது.
நாட்டுப்புற மயில் நடனத்தில் இரு நாகசுரங்கள், இரு தவில்கள், இரு பம்பைகள், ஒரு கிடுகிட்டி ஆகியவைக் கொண்ட நையாண்டி மேள இசை பக்க இசையாக இசைக்கப்படுகிறது. இசைக்கேற்ப தலையசைப்பு, தோகையை விரித்து சுருங்கி ஆடுதல் ஆகியவை செய்யப்படுகிறது. மேலும், மக்களைக் கவரும் வகையில் பல சாகசங்களும் இந்த நடனத்தில் நிகழ்த்தப்படுகின்றன. உதாரணமாக, நடனம் ஆடுபவர், எதிரில் உள்ளவருக்கு மாலை போடுதல், தரையில் உள்ள பணத்தை எடுத்தல், மயில் தன் அலகால் நீரை உறிஞ்சிக் குடித்தல் போன்ற பல வியக்கத்தக்க சாகசங்கள் தற்காலத்தில் நிகழ்த்தப்படுகின்றன. எனினும், நாட்டுப்புற மயிலாட்டம் தனித்ததொரு நடனமாக முக்கியத்துவம் பெறாமல், கரகாட்டத்தின் துணைநிலை ஆட்டமாகவே கருதப்படுகிறது. கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் முதலான ஆட்டங்களுக்குத் துணையாகவும், அந்த ஆட்டங்களுக்கு இடையிலும் மயிலாட்டம் ஆடப்படுகிறது.
நாட்டுப்புற மயில் நடனத்தில், மயிலின் தலை, உடல், இறக்கைகள் முதலியவைகள் தனித்தனியே களிமண், சாக்கு, காடாத்துணி போன்றவற்றால் செய்யப்பட்டு, மயிலைப் போல் வண்ணம் தீட்டப்படுகிறது. மயிலின் தலையில் கம்பியாலான கொண்டைகளும், திறந்து மூடுவதற்கேற்ப தகடுகளாலான வாயும் அமைக்கப்பட்டு இருக்கும். மேலும், மயில் கூடு என்று அழைக்கப்படும் மயிலின் உடற்பகுதி மிகவும் கனமாக அமைக்கப்பட்டு, கலைஞர்கள் அதனைச் சுமந்து கொண்டே ஆடும் வகையில் நாட்டுப்புற மயிலாட்டம் திகழ்கிறது. மயில் கூட்டின் அடிப்பக்கத்தில் பொருத்தப்படும் மயிலிறகுகள், ஆட்டக்கலைஞர் நிமிர்ந்து ஆடும் போது குவிந்தும், குனிந்து ஆடும் போது விரிந்தும் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். மயிலாட்டக் கலைஞர் தன்னை மயிலாக ஒப்பனை செய்துகொள்ளும் போது மயிலின் கூம்பு போன்ற கழுத்து பகுதியைத் தன் தலையிலும் மயிலின் உடல் கூட்டினைத் தோளிலும் கட்டிக்கொள்வர். இரண்டு கைகளிலும் மயிலின் இரண்டு இறக்கைகள் கட்டப்படும். மயிலின் கழுத்துப் பகுதியில் தொங்கும் நீலத்துணி கலைஞரின் கழுத்தையும், உடல் கூட்டிலிருந்து தொங்கும் பச்சை வண்ண துணி கலைஞரின் உடல் மற்றும் கால்களையும் மறைக்கும் வகையில் அமைந்து, சலங்கைகள் கட்டப்பட்ட கால்கள் மட்டுமே வெளியில் தெரியுமாறு இருக்கும். மயில் நடத்தல், ஓடுதல், தலையை அசைத்தல், தோகையை விரித்தல், அகவுதல் போன்ற செயல்கள் நடன அடவுகளாக இருக்கும். ஒருவர் முருகன் வேடமிட்டு வர மயில் அவருடைய வாகனமாக நடிப்பதும் மயிலாட்டத்தின் சில வகைகளில் உண்டு.
ஆனால், செவ்வியல் நடனமான பரதநாட்டியத்தில் வரும் மயிலாட்டம் மேற்கூறிய நாட்டுப்புற விதத்தில் இருந்து மாறுபட்டதாகும். இடுப்பில் சுருங்கி விரியும் மயிலிறகைக் கட்டிக் கொண்டு, மயிலின் நிறத்தைப் போலச் சட்டையும், காலுறையும் அணிந்து, பெண்கள் ஆடுமாறு இந்த வகை மயிலாட்டம் அமைகிறது. இரு கைகளையும் மயிலின் மூக்கைப் போல பாவனை செய்து கொண்டு, மயில் தயங்கி தயங்கி வருவதைப் போலவும், மகிழ்ச்சியில் தோகையை விரித்து ஆடுவது போலவும், இரையைத் தேடுவது போலவும், பாம்பைத் தாக்க முற்படுவது போலவும் அடவுகள் அமைக்கப்பட்டு, அதற்கானப் பாடல்கள் புன்னாக வராளி இராகத்தில் அமைக்கப்பட்டு செவ்வியல் மயிலாட்டம் ஆடப்படுகிறது.
இவ்வாறு, இரண்டு வகை மயிலாட்டங்களுமே தமிழகத்தில் பல ஆண்டுகளாகச் சிறப்பு பெற்று விளங்குகின்றன. ஆனால், இன்றைய நிலையில், கவனம் பெறாத கலையாக மயிலாட்டம் இருப்பது வேதனையளிக்கும் செய்தியாகும். எனவே, இந்தக் கலையையும் கலைஞர்களையும் மதித்து, மயிலாட்டத்தை அழிவிலிருந்து மீட்டு, பாதுகாக்க முற்படுவோம்.