சென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டத்தை மேயர் பிரியா தொடக்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துத் தீர்வு காணும் வகையில், `மக்களைத் தேடி மேயர்' என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, சென்னையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டத்தை மேயர் பிரியா இன்று தொடக்கி வைத்தார்.
முதற்கட்டமாக ராயபுரம் வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். இந்த மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற உள்ளார். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடையுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுகொண்டுள்ளது.