மெக்சிகோ நாட்டில் வரும் ஜூன் 2ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் புதிய செனட் உறுப்பினர்கள், ஆளுநர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிபர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த சூழலில் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதன்படி, பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேயர் வேட்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மெக்சிகோ நாட்டில் எதிர்க்கட்சியை சேர்ந்த மேயர் வேட்பாளர் அல்பிரடோ கப்ரேரா, பிரச்சாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது அருகில் இருந்த நபர் பொதுமக்கள் முன்னிலையில் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அவர் மீதும் அவருக்கு பின்னணியில் செயல்பட்டவர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடவடிக்கைகளுக்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆளும் கட்சி செய்ய தவறியதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வருகிறது. மெக்சிகோ நாட்டில், கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இதுவரை 22 தேர்தல் படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது.