இயற்கையைப் போற்றியும் வணங்கியும் வந்தத் தமிழர்கள், இயற்கை ...

இயற்கையைப் போற்றியும் வணங்கியும் வந்தத் தமிழர்கள், இயற்கை நிகழ்வுகளின் அறிவியலை நன்கு உணர்ந்திருந்தனர். நவீனத் தொழில்நுட்பத்துடன் இன்று கண்டறியப்படும் உண்மைகள் பலவும் தமிழர்களால் முன்பே இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, உலகில் உள்ள மொத்த நீரின் அளவு பற்றி, கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் நவீன அறிவியல் உலகம் பேசி வருகிறது. ஆனால், திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ‘மாறாநீர்’ பற்றிக் கூறியுள்ளார்.

‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி’

என்ற குறள் மூலம் “இந்த உலகில் உள்ள நீரின் அளவு மாறுபடாது” என்ற அறிவியல் உண்மை வெளிப்படுகிறது. நீர் என்ற இயற்கை வளம், மழையின் வடிவில் பெரிதும் பலனளிக்க வல்லது என்பதைப் பழங்காலத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். எனவே, மழையைப் பற்றிப் பலக் கருத்துகளைப் பாடியுள்ளனர்.

மழைக்குப் பல வடிவங்கள் உண்டு. காற்றோடு பெய்யும் மழை, இடியுடன் கூடிய மழை, பனிக்கட்டி மழை, சாரல் என்று பலவகையில் அறியப்படும் மழைக்கு, தனித்தனியே அவற்றின் இயல்புக்கு ஏற்றவாறு தமிழர்கள் பெயர் வைத்துள்ளனர். அவையாவன: துவலை, பெயலை, துளி, மாரி, உறை, பெயல், ஆலி, உதகம், சிதறி, தூவல், சீகரம், தூறல், வருடம், சாரல் என்பனவாகும். பொதுவாக, இலக்கியங்களில், மழை என்பது கொடைக்கு உவமையாகவே கூறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, கொடை வள்ளல்களில் சிறந்தவரான பாரியின் கொடைத்தன்மையை மழையோடு ஒப்பிட்டு,

''மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே''

என்று புறநானூறு கூறுகிறது. மழையை உவமையாகக் கூறுகின்ற அதே நேரத்தில் அம்மழை தோன்றுவதற்கான அறிவியல் காரணத்தையும் பண்டைத் தமிழர்கள் மிகச் சிறப்பாக அறிந்திருந்தனர். திருவள்ளுவரும்

விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது.

என்றக் குறளில், உலகில் ஒரு சிறியப் புல் வாழ்வதற்குக் கூட மழை மிக இன்றியமையாதது என்று மழையின் அவசியத்தைச் சொல்கிறார்.

வானம் நீரை மேகமாக முகந்து மலையின் மீது பொழிகின்றது; மலையில் பொழிந்த நீர் கடலில் மீண்டும் சென்று சேர்கிறது என்ற நீர்ச் சுழற்சியைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் விளக்கியுள்ளனர். பட்டினப்பாலையில் உள்ள ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ என்ற வரிகள் அதை உணர்த்துகின்றன. மேலும், ‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ என்ற நற்றினைப் பாடலும் ‘மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி ... பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை’ என்ற அகநானூற்று பாடல் வரியும் கடலில் இருந்து நீர் மேகமாகி, மழை பொழியும் அறிவியலைக் கூறுகின்றன.

மழையால் தான் நிலத்தின் வெப்பம் தணிகிறது என்பதும், வாழ்விடத்தின் வெப்பநிலையை மழையே நிர்வகிக்கிறது என்பதும் அறிவியல் உண்மை. அதனை,

'குணகடல் முகந்து குடக்கு ஏர்வு
மண் திணி ஞாலம் விங்கக் கம்மியர்'

என்ற நற்றிணைப் பாடல் விளக்குகிறது. மேலும், காற்றே மேகங்களை இழுத்து வந்து மழை பெய்யச் செய்கிறது என்பதை

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே

என்று அகநானூறு குறிப்பிடப்படுகின்றது. அதோடு, மேகத்தின் அடர்த்தியைப் பொறுத்தே அது மிதந்து செல்லும் உயரம் அமைகிறது என்ற உண்மையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் அறிந்திருந்தனர். அதற்குச் சான்றாக, அதிகளவு நீர் இல்லாத மேகம் மேலே உயர்ந்து செல்கிறது என்றும் அதிகளவு நீர்த்தன்மை இருக்கின்ற மேகம் உயர்ந்து செல்லாமல், “கடுஞ்சூல் மகளிர் போன்று” தாழ்ந்து செல்வதாகவும் குறுந்தொகை குறிப்பிடுகிறது.

காற்று வீசும் திசைக்கு குறுக்காக உள்ள மலைகள் மேகங்களைத் தடுப்பதைக் கவனித்த புலவர்கள், தங்கள் பாடல்களில் அதனைப் பதிவு செய்துள்ளனர். காற்றால் அடித்துச் செல்லப்படும் மேகங்களைப் பெரிய மலைகள் தடுக்கின்றன; அம்மலைகளில் காணப்படும் தாவரங்களின் குளிர்ச்சியால், மேகங்களில் உள்ள நீரின் அடர்த்தி அதிகமாகி, மழை பொழிகின்றது என்பதை

“நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து..”

என்ற நற்றிணைப் பாடல் கூறுகிறது. இப்பாடலில் அடர்த்தி அதிகரித்தல் “செறிதக” எனும் சொல்லால் கூறப்படுகிறது. இதே கருத்தை,

“வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து”

என்றப் பாடல் வரிகளும் விளக்குகின்றன. காற்று மேகத்தில் மோதுவதால், விரைவுடன் பொழியும் மழை ஆலங்கட்டியோடு சிதறிப் பொழியும் அறிவியலை,

'மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
கான்மயங்கு கதழுறை யாலியொடு சிற்றிக்”

எனும் பதிற்றுப்பத்து வரிகள் கூறுகின்றன.

மேலும், வானில் நடைபெறும் நிகழ்வுகளால் பூமியில் ஏற்படும் மாற்றத்தை அறிய முடியும் என்ற உயரிய வானியல் அறிவு பெற்றவராக சங்கத்தமிழர் இருந்தனர். வெள்ளிக்கோள் மழைக்கோள் என்று கருதப்பட்டு, அது செல்லும் பாதையைக் கொண்டு வறட்சி தோன்றுவதைப் புறநானூறு,

வெள்ளித் தென்புலத் துறைய விளைவயற்
பள்ளம் வாடிய பயனில் காலை

என்ற வரிகள் மூலம் எடுத்துரைக்கிறது. இவ்வாறு, இன்றைய வானிலை ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்லும் பல செய்திகளை, தமிழ் இலக்கியங்கள் முன்பே கூறியிருப்பது மிகவும் வியப்பானதாகும். “மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!”.

100
2
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu