அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வினியோகிப்பதை உறுதி செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில், மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் பொறுப்பாளராக பணியாற்றிய முத்துமாலை ராணி என்பவர், தனக்கு வர வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு எதிராக, அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மருந்து வாங்கியதாகவும், அது காலாவதியாகி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவதாக பொது தளங்களில் குற்றச்சாட்டுகள் வருகின்றன.நோய் பரவல் நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடுகிறதா என்பதை விசாரிக்க வேண்டும். நோய் பரவலுக்கான காரணங்களை தெரிவிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் வந்தது. அப்போது நீதிபதி, கொள்முதல் செய்யும் மருந்துகள் காலாவதியாக விடாமல் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பலாம். இதுகுறித்து, உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காலாவதி மருந்து வினியோகம் குறித்து புகார் அளிக்க வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார். இதுகுறித்து, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று விசாரணையை வரும் 9ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.