இந்தியாவின் பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனமான மீஷோ, 2022-ம் நிதியாண்டில், 7.5 மடங்கு இழப்பை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டில், மீஷோ நிறுவனத்தின் இழப்பு 3247 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் வருவாய் 4.5 மடங்கு அதிகரித்து, 3232 கோடியாக பதிவாகியுள்ளது. பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இணைய வர்த்தக ஜாம்பவான்களுடன் போட்டியிடும் மீஷோ நிறுவனம், அதன் இடத்தை தக்க வைக்கும் முயற்சியில் இந்த இழப்புகளை சந்தித்துள்ளது. இந்த நிறுவனம், கமிஷன் எதுவும் பெறாமல், விளம்பரக் கட்டணம் மட்டுமே வசூலித்து தளத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் செலவினங்கள் கடந்த வருடத்தில் 5 மடங்கு அதிகரித்து, 6647 கோடியாக பதிவாகியுள்ளது. எனவே, இந்த நிறுவனம் தற்போது செலவுகளை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் பகுதியாக, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு, ‘ரிட்டர்ன்’ சேவை தடை செய்யப்பட்டுள்ளது.