மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அனைத்து தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. அந்த வகையில், மைக்ரோசாப்ட் 365 தளங்களில் கோ பைலட் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இது தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது தேடு பொறி, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பிற தளங்களில், கோ பைலட் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வந்தது. முதற்கட்டமாக, குறிப்பிட்ட சில வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போது, பொது பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தபட்சம் 300 பயனர்களைக் கொண்ட நிறுவனத்திற்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது. அத்துடன், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு மாதத்திற்கு 30 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.