மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பை அறிமுகம் செய்துள்ளது. "மஜோரானா 1" எனப்படும் இந்த சிப், பாரம்பரிய கணினிகளை விட மிக வேகமாக செயல்படும் என கூறப்படுகிறது. கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்களும் குவாண்டம் தொழில்நுட்பம் விரைவில் வளர்ச்சி அடையும் என கணித்துள்ள நிலையில், மைக்ரோசாஃப்டின் புதிய கண்டுபிடிப்பு அந்த முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. குவாண்டம் கம்ப்யூட்டர்கள் ஒரே நேரத்தில் 0 மற்றும் 1 ஆகிய இரு மதிப்புகளையும் பயன்படுத்துவதால், கணிதம், வேதியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ள இந்தச் சிப்,
டோபோலஜிக்கல் கோர் அடிப்படையிலான குவாண்டம் ப்ராசசிங் யூனிட் ஆகும். தற்போதைக்கு இது சிறிய அளவில் உருவாக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் பெரிய அளவிலான கணிப்புகள் செய்யும் திறன் பெறும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த சிப் கணினியில் பிழைகளை குறைத்து செயல்படும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் CEO சத்ய நாடெல்லா, தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தி, 20 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இது கிடைத்த முக்கியமான முன்னேற்றம் எனக் குறிப்பிட்டுள்ளார்.