ஐ.நா. பணியாளர்கள் 7 பேர் மரணம் தற்செயலாக நடைபெற்றது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
காசாவுக்கு உணவு பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற தொண்டு நிறுவனத்தின் வாகனத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் அதன் ஊழியர்கள் ஏழு பேர் பலியாகியுள்ளனர். வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் எனப்படும் அறக்கட்டளை பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் காசா மக்களுக்கு உணவு பொருட்களை அனுப்பி உள்ளது. இதனை ஏற்றி சென்ற வாகனத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்த அறக்கட்டளையை சேர்ந்த ஏழு ஊழியர்கள் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்கள் இங்கிலாந்து, போலந்து, ஆஸ்திரேலியா அமெரிக்கா, கனடா மற்றும் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த தாக்குதல் தொடர்பாக அந்த அறக்கட்டளை கூறி இருப்பதாவது, நாங்கள் எங்கள் ஒவ்வொரு அசைவையும் இஸ்ரேல் ராணுவத்திடம் பகிர்ந்து கொண்டோம். அப்படி இருந்தும் எங்கள் வாகனத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பட்டினியை ஆயுதமாக கொண்டு இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இது மன்னிக்க முடியாதது என்று கூறியுள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் உணவு வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் கூறுகையில், இந்த தாக்குதல் சம்பவம் தற்செயலாக நடைபெற்றது என்றும் திட்டமிடப்படாதது என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. அதோடு இதற்கு முழு பொறுப்பை ஏற்பதாகவும் கூறியுள்ளது.