காசா பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற தினமும் நான்கு மணி நேரம் தாக்குதல் நிறுத்தி வைக்கப்படும் என்று இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.இது குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை அமெரிக்க அதிபர் ஜோ பிடென் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் அந்த பகுதியில் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிடென் கேட்டுக் கொண்டார். அதன்படி நேற்று முதல் தினமும் நான்கு மணி நேரத்துக்கு காசாவில் தாக்குதலை நிறுத்தி வைக்க இஸ்ரேல் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு வரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற இரண்டாவது பாதுகாப்பு வழிதடத்தை இஸ்ரேல் திறந்துள்ளது.வடக்கு காசா பகுதியில் இருந்து பொதுமக்கள் தெற்கு காசாவுக்கு வெளியேறி வருகின்றனர். மக்கள் நடைபயணமாகவும், கழுதை வண்டிகளிலும் ஆயிரக்கணக்கில் வெளியேறி வருகின்றனர். இதுவரை காசா இஸ்ரேல் இடையே நடைபெற்ற போரில் 10,800க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.