ஒரு உணவுப் பொருள் உலகின் வரலாற்றையே மாற்றி எழுதியது என்றால் அது மிளகு மட்டுமே ஆகும். மிளகின் தாயகம் தென்னிந்தியாவாகும். 16ஆம் நூற்றாண்டில் மிளகைத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு செல்வதற்காகவே இந்தியாவிற்கான கடல்வழியை அறிய பல முயற்சிகள் செய்யப்பட்டது. மிளகிற்கான இத்தகையத் தேடல்தான் பிற்காலத்தில் இந்தியாவை ஐரோப்பியர் கைப்பற்றி அரசாளவும், அமெரிக்கா போன்ற அறியப்படாத கண்டங்களைக் கண்டுபிடித்து, குடியேற்றம் செய்யவும் வழிவகை செய்து, உலகின் வரலாற்றையே மாற்றியது.
இத்தனைச் சிறப்பு வாய்ந்த இந்த மிளகு உணவில் சேர்க்கப்படும் காரச் சுவைக் கொண்டதொரு நறுமணப் பொருளாகும். இதன் மணத்திற்கும் சுவைக்கும் ஈடில்லை என்பதால் வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே, உலகின் பல பகுதிகளிலும் மிளகு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிளகிற்கானத் தேவை இதனை “கருப்பு தங்கம்” என்று கூறும் அளவிற்கு விலையுயர்ந்ததாக மாற்றியது. மிளகு முற்காலத்தில் செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டது. உதாரணமாக, பழம்பெரும் நாகரிகமான எகிப்து நாகரிகத்தின் பிரமிடுகளில், பதப்படுத்தப்பட்டுள்ள இறந்த அரசர்களின் மூக்கு துவாரங்களில் மிளகு காணப்பட்டதன் மூலம், பண்டைய எகிப்து நாகரிகத்தில் மிளகு சிறந்த மருத்துவப் பொருளாகவும், விலையுயர்ந்தப் பொருளாகவும் மதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மேலும், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையில், ஐரோப்பியக் குடும்பங்களில் ஒரு பெண் திருமணமாகி வரும்போது மிளகு சீதனமாகக் கொடுக்கப்பட்டது என்பது மிளகிற்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
‘பைப்பர் நிக்ரம்‘ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட மிளகு, 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த, பூத்து, காய்த்து, படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். தமிழ் இலக்கியங்களில் மிளகைப் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. மிளகின் கொடி கருமையாகவும், மிளகு பசுங்காயாகவும் கொத்தாகவும் காணப்படுவதை “கருங்கொடி மிளகின் காய்த்துணர் பசுங்கறி” என்ற பாடல் வரிகள் கூறுகின்றன. நிழல் தரும் மரங்களில் படர்ந்தும், தோட்டங்களாகப் பயிர் செய்யப்பட்டும் மிளகு வளர்க்கப்பட்டதை, "பைங்கறி நிவந்த பலவின் நீழல்", "கறிவளர் சாந்தம்", "கறிவளர் அடுக்கம்" என்ற சங்க இலக்கிய வரிகள் மூலம் அறிய முடிகிறது.
மிளகில் உள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளே மிளகின் காரத்தன்மைக்கும் மருத்துவக் குணங்களுக்கும் காரணமாகும். மிளகில் சாதாரண மிளகு, வால் மிளகு என இருவகைகள் உள்ளன. மிளகைப்போலவே, ஆனால் காம்புடன் இருப்பதால், வால்மிளகு எனப் பெயர் பெற்ற மிளகு வகை சித்தமருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. மேலும், மிளகைப் பதப்படுத்தும் முறையின் அடிப்படையில் கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என மேலும் சில வகைகளும் உண்டு.
நறுமணப் பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படும் மிளகின் உலகளாவியப் புகழுக்கும், பயன்பாட்டிற்கும் அதன் மணமும், காரமான சுவையும் மட்டுமே காரணமல்ல. அதன் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களும்தான். பல நூற்றாண்டுகளாகவே மிளகு இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிளகின் மருத்துவக் குணத்தைத் தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். எனவேதான் மருந்தின் பெயர் கொண்டு அமைந்த இரண்டு சங்க இலக்கிய நூல்களில் மிளகை இடம்பெறச் செய்துள்ளனர். ‘திரிகடுகம்' என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துகளின் கூட்டுப் பெயராகும். 'ஏலாதி' என்பது ஏலம், இலவங்கம், சிறுநாகப்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு பொருள்களின் கூட்டுப் பெயராகும். இவை இரண்டிலும் மிளகு இடம்பெற்றிருப்பது மிளகின் மருத்துவக் குணத்தை எடுத்துக் கூறுவதாக உள்ளது. மேலும், மிளகின் மருத்துவக் குணத்தைச் சிறப்பிக்கும் வகையில் “பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்ற பழமொழியையும் தமிழர்கள் உருவாக்கி உள்ளனர். இவ்வாறு, 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் உணவில் காரம் சேர்க்க கருப்பு மிளகு, கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலி போன்றவை மட்டுமே சேர்க்கப்பட்டு வந்துள்ளது. இதற்குச் சான்றாக,
பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளையீ
என்ற பெருபாணாற்றுப்படை பாடல் வரி திகழ்கிறது. மிளகின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, அதற்கு மாற்றாக மிளகாய் பயன்பாடு 16 ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது. மிளகின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, இலக்கியங்கள் மூலமாக, மிளகு பெற்றுச் செல்வதற்காகவே போர்கள் நடைபெற்றதும், மிளகு வர்த்தகம் பற்றியும் அறிய முடிகிறது. தமிழகத்தில் இருந்து மூடை மூடையாக மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டதை “காலில் வந்த கருங்கறி மூடை” என்ற பட்டினப்பாலை பாடல் வரிகள் உறுதிப் படுத்துகின்றன.
தமிழகத்தின் மேற்கு கரையில் விளைந்த மிளகை, கிழக்குக் கடற்கரையோரமாகச் சிறந்து விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு வண்டிகளிலும் பொதிமாடுகள் மேல் ஏற்றியும் கொண்டு வந்துள்ளனர் என்றும் அப்படி ஏற்றி வரும் வழியில் சுங்க சாவடியில், அரசு ஊழியர்கள் வரியும் வாங்கியுள்ளனர் என்றும்
தடவிநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
அணர்ச்செவி கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழி
என்ற பெருபாணாற்றுப்படை பாடல் கூறுகிறது. இதன் மூலம் மிளகின் சிறப்பு மட்டுமின்றி, தமிழர்களின் உயரிய உள்நாட்டு கட்டமைப்பு, பொருளாதார நிலை, வர்த்தகம் போன்றவற்றையும் அறிய முடிகிறது. அப்போதைய சூழலில், உலகின் பிற பகுதிகளில் நிலவிய மிளகின் அதீத தேவையால் தங்கத்தின் விலைப்பொருட்டாக மிளகினைத் தமிழர்கள் ஏற்றுமதி செய்துள்ளனர். இதனை
“யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி”
என்ற அகநானூற்று பாடல் வரிகள் விளக்குகின்றன. மேலும், மிளகின் மகிமையைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் உணர்ந்து, அதைப் பாடல்களில் சொல்லியும் வைத்துள்ளனர். சிலப்பதிகார காலத்திற்கும் முந்தைய நூலான பஞ்சமரபு என்ற நூலில் மிளகு, திப்பிலி, தேன், சுக்கு, இம்பூரல், பசுவின்பால், தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
திப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்
துப்பில்லா ஆன்பால் தலைக்காடைஒப்பில்லா
வெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை
மன்னூழி வாழும் மகிழ்ந்து
என்ற வரிகள் அதை விளக்குகின்றன. எனவே, பழங்காலத்தில் இருந்தே மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், சளி, இருமல் ஆகியவற்றை நீக்குவதற்கும், நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது. நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. மேலும், உப்புடன் மிளகைச் சேர்த்துப் பல் துலக்கி வர, பற்கள் தொடர்பான நோய்கள் குணமாகின்றன. மேலும், பாலில் கலந்து குடிப்பதால் நல்ல தூக்கத்தை தந்து உடல் களைப்பினை அகற்றுகிறது. மிளகில் மாங்கனீசு, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின், சி, கே போன்ற விட்டமின்களும் உள்ளன.
இவ்வாறு, நம் வீட்டின் அஞ்சறைப் பெட்டியை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மிளகு தருகிறது. மிளகு நமது பாரம்பரிய மருந்தாகும். எனவே, மிளகின் மாற்றாக நாம் பழகிய மிளகாயைக் குறைத்து, மிளகை அதிகம் உபயோகித்து, உடல் அரோக்கியம் பெறுவோம்.