உலக அளவில் அக்டோபர் 31ம் தேதி, இன்ஸ்டாகிராம் சேவையில் முடக்கம் ஏற்பட்டது. இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் தங்களது கணக்கில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். மேலும், மீண்டும் இன்ஸ்டாகிராம் தளத்திற்கு உள்நுழைய முயற்சித்தால், “அக்டோபர் 31ஆம் தேதி உங்களது கணக்கு முடக்கப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பு செய்தி தெரிவிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பாதிப்படைந்தனர்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் ட்விட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டு இருந்தது. அதில், “இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலர் தங்களது கணக்கை செயல்படுத்த இயலாமல் உள்ளது பற்றி நாங்கள் அறிவோம். உங்கள் கணக்குகளை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து உள்ளீர்கள். இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நாங்கள் முயன்று வருகிறோம். இந்த சிரமத்திற்காக மன்னிப்பு கோருகிறோம்” என்று கூறப்பட்டிருந்தது.
ஏறக்குறைய 74% பயனாளர்கள் தங்கள் கணக்குகளுக்குள் உள்நுழைய சிரமங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் 16 சதவீதத்தினர், இன்ஸ்டாகிராம் செயலியை இயக்குவதில் குறைபாடுகள் நேரிட்டதாக தெரிவித்தனர். மேலும், 9 சதவீத மக்கள், சர்வருடனான இணைப்புகளில் பிரச்சனை இருந்ததாக கூறினர். இன்ஸ்டாகிராம் செயலியின் இந்த முடக்கம், டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, நாக்பூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் பரவலாக உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த இன்ஸ்டாகிராம் முடக்கம் பெரும்பாலும் ஐபோன் பயனாளர்கள் மத்தியில் காணப்பட்டது. குறிப்பாக, சிலர், இன்ஸ்டாகிராம் செயலி அண்மையில் செயலிழந்ததாகவும் தெரிவித்தனர். செயலியில் கொடுக்கப்பட்ட மென்பொருள் மேம்பாட்டுக்கு முன்னரே செயலி செயலிழந்ததாகவும் சிலர் கூறினர். இன்ஸ்டாகிராம் செயலியின் முடக்கத்தால் கணக்குகளை பின் தொடர்வோரின் எண்ணிக்கையிலும் சரிவு நேரிட்டுள்ளது. எனவே, இந்த முடக்கத்தினால் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.