தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி.இவர்கள் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இது 2015 ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ஒரு கோடியே 36 லட்சத்திற்கும் மேல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது. மேலும் அமைச்சர் பொன்முடி மீதான போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் வருமான வரித்துறைக்கு அளித்த கணக்கின் அடிப்படையில் குற்றவியல் வழக்கில் ஒருவரை விடுதலை செய்ய முடியாது. எனவே அவர்களை விடுதலை செய்து சிறப்பு கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும். வேறு ஏதேனும் இடையூறு இருந்தால் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.