கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலைய பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கலைஞரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இதற்காக மாதத்திற்கு 6 முறை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சரால் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன என்று கூறினார்.