இந்திய கடற்படைக்கு 6 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே கையெழுத்தாக உள்ளது. அதன்படி, நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்தும், இந்தியாவிலேயே ஜெர்மன் உதவியுடன் தயாரிக்கப்படும். இந்த திட்டத்திற்கான மதிப்பு 42500 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட, ஜெர்மனி நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இந்தியா வந்துள்ளார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தியா, தனது கடற்படையை விரிவாக்கும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், இந்திய கடற்படைக்கு 24 நீர்மூழ்கிக் கப்பல்கள் தேவை. ஆனால், 16 கப்பல்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் 10 கப்பல்கள் பழமையானதாக கூறப்படுகிறது. எனவே, உடனடியாக நவீன கப்பல்களை தயாரிக்க வேண்டிய சூழலில் இந்தியா உள்ளது. இது தொடர்பாக, ஜெர்மனி - இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதன்படி, இந்தியாவின் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம், ஜெர்மனியின் தைசன்க்ரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.