தாய்லாந்து நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து, கதிரியக்க பொருட்கள் கொண்ட உலோக சிலிண்டர் ஒன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தேடும் பணியில் அதிகாரிகள் மும்மூரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சிலிண்டரில் உள்ள கதிரியக்கப் பொருள் வெளிவரும் பட்சத்தில், பொதுமக்களுக்கு தீவிர உடல் நல கேடுகள் ஏற்படும் என தாய்லாந்து எச்சரித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் இதே போல கதிரியக்கப் பொருள் மாயமான நிகழ்வு ஏற்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியாவில் மனித நடமாட்டம் வெகுவாக இல்லாத பகுதியில் கதிரியக்கப் பொருள் தொலைந்ததால், ஆபத்து குறைவாக கருதப்பட்டது. மேலும், அதன் அளவு மிகச்சிறியதாக இருந்தது. ஆனால், தாய்லாந்து மக்கள் தொகை அதிகமாக கொண்ட நாடு. மேலும், கதிரியக்க பொருளின் அளவும் தற்போது உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 30 சென்டிமீட்டர் நீளம், 13 சென்டிமீட்டர் அகலம் கொண்ட சிலிண்டர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிலிண்டரில் உள்ள சீசியம் 137 கதிரியக்கப் பொருள் வெளிவரும் பட்சத்தில், பெரிய அளவில் சேதம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.