உணவுகளின் தரத்தை கண்டறியும் வகையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்ப்பதற்கும், உணவு பொருட்களின் தரத்தை கண்காணிக்கவும் தமிழ்நாட்டில் 6 உணவு பகுப்பாய்வு கூடங்கள் சென்னை, சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூரில் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்த மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதன்படி கோவை, சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடங்கள் ரூ.1.92 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள 2 வாகனம் உள்பட 4 நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனங்கள் தொடங்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து புகார் தெரிவிப்பதற்கென்று 104 என்ற எண் உள்ளது. உணவு தர குறைபாடு குறித்து பொதுமக்கள் புகைப்படத்துடன் உணவு பாதுகாப்பு துறைக்கு 94440 42322 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.














