கோவையில் ரூ.7 கோடியில் நவீன பன்னீர் ஆலையை அமைக்கவுள்ளதாக ஆவின் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் வரும் கோடைகாலத்தில் ஆவின் தயிர், மோர், லஸ்ஸி விற்பனையை 50 சதவீதம் வரை அதிகரிக்கவும், ஐஸ்கிரீம் தயாரிப்பை தினசரி 30 ஆயிரம் கிலோவாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், ஊட்டச்சத்து நிறைந்த பாலாடைக்கட்டி (பன்னீர்) தயாரிப்பை அதிகப்படுத்தவும் ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையன் கூறுகையில், கோயம்புத்தூரில் அமைக்கப்படவுள்ள ஆலையில் ரூ.7 கோடி மதிப்பில் பாலாடைக்கட்டி தயாரிக்கும் நவீன இயந்திரம் நிறுவப்பட உள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் இந்த ஆலையில் தினசரி 2 ஆயிரம் கிலோ அளவில் பாலாடைக்கட்டி தயாரிக்கப்படும் என்று கூறினார்.