பிரதமர் நரேந்திர மோடி, இந்த வருடமும் தீபாவளி நாளில் கார்கில் எல்லைக்கு சென்று தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி நெகிழ்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் கொண்டாட்டத்தை அயோத்தியிலிருந்து தொடங்கினார். அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் தரிசனம் செய்தார். இதையடுத்து அவர், கடந்த ஆண்டைப் போல ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட வேண்டி கார்கில் பகுதிக்குச் சென்றார்.
கார்கிலில் 1999-ல் நடைபெற்ற போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். கார்கிலில், ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்த வீரர்கள் குழுவினராகப் பாடி மகிழ்ந்த தேசபக்தி பாடல்களின் இன்னிசையிலும் பிரதமர் மோடி குதூகலமாகக் கலந்து கொண்டார். கார்கில் பாதுகாப்புப் படையில் உள்ள தமிழக வீரர்களும் குழுவாக கூடி நின்று பிரதமர் மோடியை வரவேற்று வணங்கினர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, பல ஆண்டுகளாக எனது குடும்பம் என்பது நீங்கள் அனைவரும்தான். கார்கிலில் துணிச்சலான வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை பெருமையாக கருதுகிறேன். நாட்டின் பாதுகாப்புக்கு தூணாக விளங்குவது படை வீரர்கள்தான். இந்த கார்கில் மண்ணில் பாகிஸ்தானுடன் நடந்த அனைத்து போரிலும் இந்தியாதான் வெற்றிக்கொடியை நாட்டி உள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.