தங்கள் நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றும் 45 அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மால்டோவா உத்தரவிட்டுள்ளது.
மால்டோவாவின் உத்தரவு குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 45 ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நட்பு விரோத நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய போர் சூழல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே மால்டோவாவை ரஷ்யா உளவு பார்த்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, ரஷ்ய தூதரக கட்டிடம் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் பயன்படுத்தும் மற்றொரு கட்டிடம் ஆகியவற்றில் உளவு கேமரா உள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதைத்தொடர்ந்து, மால்டோவாவின் தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.